அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம்- மகிந்த

நேர்மையாக செயற்படும் அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் எதிர்வரும் அரசாங்கத்தினால் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின் ஊடாக அதிகாரம் இரண்டாக பகிரப்பட்டிருந்ததன் காரணமாக நாடு அபிவிருத்தியை நோக்கி பயணிக்கவில்லை.

சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வரும்போது ஒரு பக்கத்தில் அவர்களுக்கு ஆதரவளித்தால் மறுபுறத்தில் உள்ளவர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகிறார்கள்.

இதனால் சில முதலீட்டாளர்கள் தம்மிடம் முறைப்பாடுகளை மேற்கொள்வதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம் ஜப்பான், சீனா, கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தாம் ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவதாக குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு தமது ஆட்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒருமித்த அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சியையே பிரதான காரணியாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த தமது ஆட்சியின் போது அரச அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்தோம்.

இதன்மூலம் அவர்கள் சுயாதீனமாக செயற்பட வழி வகுத்தது. எனினும் தற்போது அவ்வாறு இல்லை.

அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டால் சிறை செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.

ஆகவே அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரமுடியாத வகையில் அரசியலமைப்பில் ஒரு திருத்தம் ஒன்றை தமது ஆட்சியின் ஊடாக கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.