சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை நீடிப்பு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல். சூரியபண்டார தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடவடிக்கை கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வினை மேற்கொண்ட 2 கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் மண் அகழ்வு நடைபெறும் இடங்களும் முற்றுகையிடப்பட்டன.

குறித்த நடவடிக்கையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்துக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்மாந்துறை, சவளகடை, கல்முனை பகுதிகளுக்குரிய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடனான சந்திப்பொன்றை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், சட்டவிரோத மண் அகழ்வுகளினால் குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும், பிரதேச பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.