ஜேர்மனியில் மாமிசம் சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழப்பு: சுவிட்சர்லாந்துக்கும் எச்சரிக்கை!

ஜேர்மன் சாஸேஜ் நிறுவனம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட மாமிசத்தை சாப்பிட்ட ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, அந்த மாமிசம் சுவிட்சர்லாந்துக்கும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Wilke என்னும் சாஸேஜ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட மாமிசத்தில்,லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமியின் தாக்கம் இருந்ததால் அதை சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மாமிசம் சுவிட்சர்லாந்துக்கும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதையடுத்து, ஃபெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த பிரச்னைக்குள்ளான மாமிசம் நேரடியாக கடைகளுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அது கேட்டரிங் நிறுவனங்களுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த பிரச்னையையடுத்து ஜேர்மனியிலுள்ள அந்த சாஸேஜ் நிறுவனம் மூடப்பட்டுள்ளதோடு, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் திரும்பப்பெறும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.