உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் செயற்பாடு!

லண்டனில் இளைஞர் ஒருவர் சிறு வயதிலிருந்தே நொறுக்கு தீனி வகைகளையே தொடர்ந்து சாப்பிட்டதால் கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சிறு வயதிலிருந்தே நொறுக்கு தீனிகளை மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்திருக்கிறார். உணவையோ, பழ வகைகளையோ கடந்த 10 ஆண்டுகளில் அவர் சாப்பிடவேயில்லை. இதனால் 14 வயதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார் அவர். மருத்துவர்கள் ஊட்டச்சத்தான உணவுகளை பரிந்துரைத்தும் அதை அவர் உண்ணவில்லை.

தொடர்ந்து சிப்ஸ் வகைகளை மட்டுமே சாப்பிட்டு வந்த அவர் தனது 17வது வயதில் கண் பார்வையை முற்றிலுமாக இழந்து விட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது உடலில் ஊட்டச்சத்துக்கள் எதுவுமே இல்லையாம். ஊட்டச்சத்து குறைபாட்டால் கண் நரம்புகள் செயல் இழந்துள்ளன. அவரது எலும்புகளில் கூட தேவையான அளவு சத்து கிடைக்காததால் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

அவரது உடல்நிலை ஒரு 17 வயது இளைஞனுக்கு உரியதாக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். நொறுக்கு தீனி அதிகம் சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருந்ததால் பெற்றோரும் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறிய மருத்துவர்கள் “இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய விஷயம் என்றாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவதிலும், அவர்களை தொடர்ந்து அதற்கு பழக்குவதிலும் தீவிர அக்கறை காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் பல குழந்தைகள் உணவு சாப்பிட மறுக்கிறார்கள். பழங்கள், சத்தான உணவு வகைகளை சிறு வயது முதலே அவர்களுக்கு பழக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இப்படி ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.