‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு, அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தை இயக்கினார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய நாளில் வெளியான அந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போதும் டிவியில் அந்தப்படத்தை ஒளிபரப்பினால் பலரும் பார்ப்பார்கள்.
2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்கு பிறகு வெளிவந்த ‘ஏகன், அசல்’ ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் ‘மங்காத்தா’ படம் அஜித்துக்கு திருப்புமுனையான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அஜித்தின் திரையுலகப் பயணம் ஏறுமுகத்தில்தான் இருக்கிறது.
இன்று ‘மங்காத்தா’ பட தினத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அவருடைய டுவிட்டரில், “உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி. வேற என்ன சொல்றது. அவருக்கு தோணும் போது சொல்லுவார். ஒவ்வொரு வருடமும் அன்பு ஏறிக் கொண்டே போகிறது,” என பதிவிட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்தும் கூறும் ரசிகர்கள் ‘மங்காத்தா 2’ எப்போது என்று கேட்டு வருகிறார்கள். அதற்குத்தான் தன்னுடைய டுவீட்டிலேயே பதிலை பதிவிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.