.மகன் வீடியோ எடுக்க… உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி….

புகார் கொடுத்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதி உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா காவல் நிலையத்தின் பின் பக்கத்தில் இருந்து கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது.

அங்கிருந்த சிலர் சத்தம் வரும் பகுதியை நோக்கி சென்ற போது, ஒரு தம்பதியினர் தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

கணவனும், மனைவியும் உடலில் தீயுடன் அங்குமிங்குமாக ஓடுவதை பார்த்தும் கூட பொலிஸார் உதவி செய்யாமல் இருந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அனைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர், இருவரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற தம்பதியினர் 45 வயதான Jugendra மற்றும் அவருடய மனைவி என்பதும், அதனை தம்பதியினரின் 14 வயது மகன் வீடியோவாக எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அன்று உள்ளூரை சேர்ந்த சத்யபால் சிங்(23) என்கிற ரவுடி, தினமும் தொந்தரவு கொடுப்பதோடு வீட்டில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த புகாரில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரவுடிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து போன தம்பதி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தீபக்கினை இடைநீக்கம் செய்து பொலிஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.