பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் டெஸ்ட்.. ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டம்!

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 359 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருவதால், 3வது ஆஷஸ் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

லீட்ஸில் நடந்து வரும் ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 179 ஓட்டங்களிலும், இங்கிலாந்து 67 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது. லபுசாக்னே 53 ஓட்டங்களுடனும், பேட்டின்சன் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 3வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. பேட்டின்சன் 20 ஓட்டங்களில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

லபுசாக்னே 80 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் பர்ன்ஸ்(7), ஜேசன் ராய்(8) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டென்லி நிதானமாக ஆடி 50 ஓட்டங்கள் சேர்த்தார்.

ஜோ ரூட் பொறுப்பாக ஆடி 75 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 எடுத்துள்ளது. இன்னும் அந்த அணியின் வெற்றிக்கு 203 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடினால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.