எங்கள் வாழ்க்கையை அப்பா சீரழித்துவிட்டார்..! பதறியடித்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தங்களின் இறப்புக்கு காரணம் தந்தை தான் எனக் கூறிவிட்டு, மாணவி ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் மின் வாரியத்தில் பணிபுரிந்து வருபவர் சித்தய்யா(48). இவரது மனைவி ராஜேஸ்வரி(40) மற்றும் மகள்கள் மானசா(17), பூமிகா(15). இவர்கள் அனைவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

ஆனால், சித்தய்யாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்த சித்தய்யா, தனது மனைவியுடன் சண்டையிட்டு தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூத்த மகள் மானசா தனது மாமா புட்டசாமிக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் ‘ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் சாவுக்கு அவர்தான் காரணம்’ என்று இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த புட்டசாமி, பதறியடித்துக் கொண்டு சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது சகோதரி ராஜேஸ்வரி, மருமகள்கள் மானசா, பூமிகா மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக புட்டசாமி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மூவரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.