பல பகுதிகளில் இளைஞர்களை ஏமாற்றிய பெண் பொலிஸாரிடம் சிக்கினர்!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் பல இளைஞர்களிடம் பணம் கொள்ளையடித்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரிடம் நியூசிலாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி இந்த பெண் ஐந்து இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளார்.

வழங்கிய வாக்குறுதிக்கமைய தொழில் கிடைக்காமையினால் குறித்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய செயற்பட்ட அதிகாரிகள் ரமனி பிரதீபிக்கா நாணயக்கார என்ற பெண்ணையும் அவருக்கு உதவிய இருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணிடம் இருந்து 6 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் வேறு பல கடிதங்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணையின் போது அவருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதி நீதிமன்றங்களில் 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குற்றவாளியாக நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் நாடாளவிய ரீதியில் பலரிடம் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.