இலங்கையர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோர சம்பவம்!

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் வெலிகந்தை பிரதேசத்தில் கடந்த மாதம் 18ஆம் திகதி கோர விபத்தொன்று பதிவாகியிருந்தது.

இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததுடன், சுமார் பத்து பேர் வரையில் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் குறித்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பத்து பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்றைய தினம் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் வைத்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது சமூக அவதானிகள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தின் காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.

திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வானும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேர்ந்த இந்த கோர விபத்து காரணமாக இரட்டை பெண் குழந்தைகள் உள்ளிட்டோரே உயிரிழந்தனர்.

மட்டக்களப்பை சேர்ந்த இவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிய போதே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவமானது இலங்கையர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலியாகியிருந்த போதும் அவர்களது குடும்பங்களுக்கு எவ்விதமான நிதியுதவியும் வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த மாதம் வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்றைய தினம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வாறானதொரு பாகுபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையில் எந்த வகையில், எந்த ரீதியில் வித்தியாசம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை என சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாரபட்ச செயற்பாடானது விமர்சனத்தை தாண்டிய வலியை பலரது மனதிலும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.