காதலியை கொன்று புதைத்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற ராணுவ வீரர்!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலியை ரகசிய திருமணம் செய்து பின்னர் கொன்று புதைத்த ராணுவ வீரரை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான பூவாறு திருபுறம் பகுதியை சேர்ந்த ராகிமோள் என்ற இப்பெண்ணை அகில் என்பவர் 6 வருடங்களாக காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார்.

பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வேறு திருமணம் செய்ய நினைத்த அவர், காதல் மனைவியை தம்பி ராகுல் மற்றும் நண்பருடன் சேர்ந்து தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் உள்ள நண்பரின் காரில் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.

அத்துடன் அம்பூரி பகுதியில் உள்ள தனது குடியிருப்பின் பின்புறம் உடலை நிர்வாண நிலையில் புதைத்துள்ளார்.

மட்டுமின்றி சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் மக்கிப்போவதற்காக உப்பையும் கொட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி நடந்துள்ளது.

இதையடுத்து மகள் காணாமல் போனது தொடர்பாக பூவாறு காவல்நிலையத்தில் ராகிமோளின் பெற்றார் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் சிறப்பு படையை நியமித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 25ஆம் திகதி புதைக்கப்பட்ட உடல் மீட்கப்பட்டது. அத்துடன் கொலைக்கு உதவிய அகிலின் தம்பி ராகுலும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அகில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அவரை ரகசிய தகவலின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.