கதறி அழுதபடி பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்..

இந்தியாவில் துப்பாக்கி முனையில் வாலிபருக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர் வினோத் குமார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் திகதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகும் வினோத் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாக கூறினார். இதையடுத்து சஞ்சய் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.

வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள், வீடியோ இணையத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து தெரிந்ததும் சஞ்சய் பொலிஸ் உதவியுடன் வினோத்தை மீட்டார்

இது தொடர்பில் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு பீகார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வினோத்துக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.