23 வருட சிறைக்கு பின் நிரபராதி என விடுதலை.. பெற்றோர் கல்லறையில் மகன் செய்த செயல்!

23 வருட சிறைக்கு பின் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட, 48 வயதான அலி முகமது பட், பெற்றோர் கல்லறையில் படுத்து கண்ணீர் விட்டு கதறிய காட்சி உருக வைத்துள்ளது.

1996 ஆம் ஆண்டு சாம்லேட்டி குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 48 வயதான அலி பட்டையும் மேலும் நான்கு பேரை செவ்வாய்க்கிழமை விடுவித்தது. விடுதலைக்கு பின் ஸ்ரீநகரில் உள்ள வீடு திரும்பிய அலி, செய்த முதல் காரியம் அவரது பெற்றோரின் கல்லறைக்கு முன் சிரம் பணிந்தது தான்.

வாழ்கையில் 23 ஆண்டுகள் சிறையிலேயே கழித்த அலி, தனது இளமை வாழ்க்கை மற்றும் பெற்றோர்களை இழந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில், சாம்லேட்டி கிராமத்திற்கு அருகே ஒரு பஸ்ஸில் குண்டு வெடித்ததில், 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர்; பஸ் ஆக்ராவிலிருந்து பிகானேருக்குச் சென்றது.

சாம்லேட்டி வழக்கில் 12 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுவரை 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் 2014-ல் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இதுபோன்று பொய் குற்றச்சாட்டின் பேரில் வாழ்வை இழக்கும் பல அப்பாவிகளின் பின்னால் இருக்கும் துயர வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.