ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மகளுக்கு ஈழத்தமிழரே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியருக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளார்.
இவர் சிறையில் பிறந்தவர். இந்நிலையில் ஹரித்ரா லண்டனில் தங்கியிருப்பதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க, 6 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால் நீதிமன்றம் அவருக்கு 1 மாதம் பரோல் மட்டுமே வழங்கியது. அதுமட்டுமின்றி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தினமும் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும், அதன் பின் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் திகதி வேலூர் சிறைக்கு திரும்பிவிட வேண்டும் என்று 12 நிபந்தனைகளின் அடிப்படையிலே அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமையே வெளியே வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் பல நடைமுறைகளுக்கு பிறகு இன்று காலை ஆரஞ்சு நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி வெளியே வந்தார்.
வெளியே வந்த அவர் தன் மகளுக்கான மாப்பிள்ளையை தேடவுள்ளார்.
இது குறித்து அவரின் வழக்கறிஞரிடம் பிரபல தமிழ் ஊடகம் கேட்ட போது, அவர் ஹரித்ராவுக்கு நல்ல வரனைப் பார்த்துவருகிறோம்.
இதில் நான்கு, ஐந்து மாப்பிள்ளைகள் பொருத்தமாக இருக்கிறார்கள். ஆனால் நளினி ஈழத்தமிழ் ஒருவரைத் தான் மாப்பிள்ளையாக வேண்டும் என்று விரும்புகிறார்.
மாப்பிள்ளை இலங்கையில் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் வசிப்பவராகக்கூட இருக்கலாம். நளினிதான் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வார். மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்த பிறகு, முருகனுக்கு பரோல் கேட்க உள்ளோம்.
மாப்பிள்ளை இலங்கையில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, அவர் இலங்கையிலும் இருக்கலாம் வெளிநாட்டிலும் இருக்கலாம் என்று கூறினார்.
ஆனால் அவர் லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் என்று கூறப்படுகிறது.