இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டதில்லை: பிரித்தானியா மீது பாயும் பிரபலம்

பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தாம் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் வாசிம் அக்ரம் குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்சுலின் பையை தம்முடன் வைத்திருந்ததாக கூறி பகிரங்கமாக தம்மிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அந்த பையில் இருந்த அனைத்தையும் சோதனையிட வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அடம்பிடித்ததாகவும் வாசிம் அக்ரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பகிர்ந்துள்ள அக்ரம், இதுபோன்ற ஒரு நிலை வாழ்நாளில் தாம் எதிர்கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் விமான நிலையத்தில் இன்று நான் அவமானப் படுத்தப்பட்டேன், என தொடங்கிய அந்த டுவிட்டர் பதிவு,

உலகின் எல்லா மூலையிலும் தாம் தமது இஸ்சுலின் பையுடனே விமான பயணம் மேற்கொண்டு வருவதாகவும்,

ஆனால் இதுநாள் வரை இதுபோன்ற ஒரு நிலை தமக்கு எந்த நாட்டில் இருந்தும் ஏற்பட்டதில்லை என அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவர்கள் எந்த இரக்கமும் இன்றி பகிரங்கமாக என்னை விசாரணைக்கு உட்படுத்தினர்.

எனது இன்சுலின் பையை திறந்து அதில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு பத்திரப்படுத்தினர் என அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்ரம் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தவே, மான்செஸ்டர் விமான நிலைய அதிகாரிகள் அக்ரத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளிக்க கோரியுள்ளனர்.

மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மான்செஸ்டர் விமான நிலைய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.