டோனிக்கு சிறப்பு அனுமதி அளித்த இந்திய ராணுவம்!

இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற, டோனிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு தன்னை தெரிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட டோனி, இந்திய ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, டோனிக்கு இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற ராணுவ தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில், வீரர்களுடன் அவர் இணைந்து பயிற்சி பெறுவார். எனினும், ராணுவ நடவடிக்கையில் அவர் பங்குபெற அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காத டோனி, அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.