இந்தியாவில் தற்கொலைக்கு முயன்ற பிரித்தானிய சுற்றுலாப்பயணி!

இந்தியாவில் உள்ள ஹோட்டலில் தற்கொலைக்கு முயன்ற பிரித்தானியரை பொலிஸார் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தற்கொலைக்கு முயன்ற பிரித்தானியரை பத்திரமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பிரித்தானியாவை சேர்ந்த 61 வயதான சாம் கொலார்ட் என்பவர் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27ம் திகதி அன்று சிட்னியில் உள்ள அவருடைய மனைவிக்கு போன் செய்துள்ளார். பக்கவாத நோயின் காரணமாக தற்கொலை செய்யப்போவதாக அவரிடம் கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.

உடனே அவர் பிரித்தானிய தூதரகத்தை தொடர்பு கொண்டு விவரித்துள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் இந்திய பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து சென்ற பொலிஸார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என தெரிவித்துள்ளார்.