மகளுக்காக உயிர்த்தியாகம் செய்த அகதியின் தாய்!

அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் மகளைக் கட்டியணைத்தவாறு ஆற்றில் மூழ்கி இறந்த அகதியின் தாய் தனது மகனைக் குறித்து கூறும்போது, அவன் எப்போதுமே மகளை கைவிட்டதில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தங்கள் சொந்த நாடான எல் சால்வடாரை விட்டு மெக்சிகோவிலுள்ள ஒரு அகதிகள் முகாமுக்கு வந்த Martínezஇன் குடும்பம், இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதற்காக காத்திருந்திருக்கிறது.

காத்திருந்து ஏமாந்து பின்னர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய திட்டமிட்ட Martínez, Rio Grande ஆற்றை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

முதல் கட்டமாக தனது மகளை ஆற்றின் மறுபக்கம் கொண்டு சேர்த்த Martínez, பின்னர் வந்து மனைவி Tania Vanessa Ávalos (21)ஐ அழைத்து செல்லலாம் என எண்ணி ஆற்றில் இறங்கிய நேரத்தில், குழந்தை பயந்து தண்ணீரில் குதிக்க, அவளைக் காப்பாற்ற மீண்டும் தண்ணீரில் குதித்த Martínezஐயும் அவரது மகள் வலேரியாவையும் ஆற்று வெள்ளம் இழுத்து செல்ல, மறு நாள் அவர்கள் இருவரின் உடல்களும் கரையொதுங்கின.

இறந்து கிடந்த நிலையிலும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி அவர்கள் இருவரும் கிடப்பதைக் காட்டும் படம் பத்திரிகைகளில் வெளியாகி பலரது கண்களையும் குளமாக்கியது.

இந்த நிலையில் Martínezஇன் தாயை பிரபல பத்திரிகை ஒன்று பேட்டி கண்டபோது, மகனே நீ இங்கிருந்து போகாதே, அப்படியே நீ போனாலும், உன் மகளையாவது என்னிடம் விட்டு விட்டுப் போ என்று கூறினேன், அவன் என்னிடம், முடியாது அம்மா, அவளை விட்டு விட்டு போவேன் என்று எப்படி நீங்கள் நினைக்கலாம் என்று கேட்டான் என்கிறார்.

தந்தையின் சட்டைக்குள் அவரது தோளைப் பிடித்துக் கொண்டு மகளும், மகளைக் கட்டிப்பிடித்தபடி தந்தையும் அந்த ஆற்றங்கரையில் கிடந்ததைப் பார்க்கும்போது, அவன் சொன்னது உண்மைதான் அவன் எப்படி மகளை விட்டு விட்டு போவான், சொன்னது போலவே இருவரும் சேர்ந்து போய்விட்டார்களே, என கண்ணீர் விட்டு கதறுகிறார் Martínezஇன் தாய் Rosa Ramirez.

புலம்பெயர விரும்புவோருக்கு நான் ஒன்று கூறுகிறேன் என்று சொல்லும் Rosa Ramirez, அமெரிக்கா சென்று வாழ வேண்டும் என்ற கனவில் இருக்கும் எல்லோருக்குமே அது வாய்ப்பதில்லை, இங்கிருந்தே போராடுவோமே என்கிறார்.