பள்ளி மாணவன் பலி : டிரைவர் கைது!

சிக்கல் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் லாரி மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவரும் சிக்கல் அரசு மேல்நிலை பள்ளியில படித்து வரும் நிலையில், மூன்றாவது மகன் மகேந்திரன் (13) அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகேந்திரன், சிக்கல் பேருந்து நிலையம் அருகே ஈசிஆர் ரோட்டில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மாணவன் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிக்கல் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.