வெளிநாட்டில் தமிழ் சிறுவன் செய்த சாதனை..

சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு 400 மொழிகள் அத்துபடி என்ற நிலையில் ஜேர்மனியில் அவர் திறமைக்கு மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்துள்ளது.

மஹமூத் அக்ரம் (13) என்ற சிறுவனுக்கு தெரிந்த மொழிகளின் எண்ணிக்கை 400 என்ற நிலையில், அதில் 46 மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேச அவருக்கு தெரியும்.

இந்த திறமையை வைத்து ஜேர்மனியில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் அக்ரம் பெரிய சாதனையை செய்துள்ளார்.

இது குறித்து அவர் தந்தை மொழிப்பிரியன் கூறுகையில், ஜேர்மனியில் செயல்படும் i&u டிவியில் ஒளிபரப்பாகும் mall Vs Big – the unbelievable duel நிகழ்ச்சி மிக பிரபலம்.

அந்த தொலைக்காட்சியை சேர்ந்த நபர்கள் அக்ரமின் திறமையை அறிந்து சென்னைக்கு கடந்தாண்டு ஏப்ரல் வந்தனர்.

பின்னர் அக்ரமின் திறமையை பலவகையிலும் உறுதி செய்துவிட்டு அதையே அந்நிகழ்ச்சியில் செய்ய சொன்னார்கள்.

அதன்படி சமீபத்தில் ஜேர்மனில் நடந்த நிகழ்ச்சியில் அக்ரம் கலந்து கொண்டார். அங்கு அக்ரமுடன் போட்டிப் போட 100 மொழிகள் தெரிந்த மொழி ஆளுமைமிக்க 36 பேர் வந்திருந்தனர்.

இந்த போட்டி நேரம் மூணு நிமிடம் தான் என்ற நிலையில் அதற்குள் அக்ரம் மொழி பெயர்த்த 21 மொழிகளில், 18 வார்த்தைகள் சரியாக இருந்தது.

முடிவில் அக்ரம் வெற்றி பெற்று, அவரின் மொழித் திறமை நிரூபிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனல் செலவு செய்த தொகை ரூ. 60 லட்சம்,

அக்ரமுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க அந்த நிகழ்ச்சியினர் முடிவெடுத்த நிலையில் அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறிவிட்டோம்.

அதனால் அக்ரமின் எதிர்கால படிப்புச் செலவு முழுவதையும், அந்நிகழ்ச்சியினர் ஏற்பதாக கூறிவிட்டார்கள்.

அதன்படி ஆஸ்திரிய நாட்டிலுள்ள உலகின் முன்னணி பள்ளி ஒன்றில் படிப்பதற்கு அக்ரமுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் அங்கே சென்று ஒன்பதாம் வகுப்பைத் தொடர்வார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அக்ரம் கூறுகையில், ஜேர்மனி நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. அந்நிகழ்ச்சியில நான் தமிழிலும் பேசினேன், நிறைய மொழிகளைக் கற்றுகொள்ள தொடர்ந்து ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.