ப்ளோரிடாவில் பொய் சொன்னதற்காக, கொளுத்தும் வெயிலில் பதின்ம வயது இளம்பெண்ணை அவளது தாய் நிறுத்திய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலை சந்திப்பு ஒன்றில், தனது மகளின் கையில், நான் இனி பொய் சொல்ல மாட்டேன், அம்மாவை அவமதிக்க மாட்டேன் என்று எழுதிய அட்டையை கையில் கொடுத்து ஒரு தாய் நிறுத்தியதை அவ்வழியே சென்ற பலரும் பார்த்துள்ளதோடு ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
சிலர், அந்த இளம்பெண் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு பொலிசாருக்கும் தகவலளித்தனர்.
இதற்கிடையில் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட, அதற்கு எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமல்லாது வரவேற்பும் கிடைத்தது.
கொளுத்தும் வெயிலில் ஒரு பதின்ம வயது பெண்ணை நிறுத்தியது தவறு என்று சிலரும், அவள் அங்கு நிற்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என சிலரும் விமர்சித்திருந்தனர்
அதே நேரத்தில் ஒரு பெண், இது சரியான வளர்ப்பு முறை, ஒரு நல்ல, முன்மாதிரியான செயலை அந்த இளம்பெண்ணின் தாய் செய்துள்ளார் என்று கூறியுள்ளதோடு, அந்த பெண்ணின் தாயும் அவள் அருகிலேயே நின்றதையும், அவள் அருகில் தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டி பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில் பொலிசார் அங்கு சென்று பார்த்ததாகவும், அங்கு எந்த பிரச்சினையும் இல்லாததால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.