பாலைப்பழம் விற்ற சிறுவன் – விஜயகலா என்ன செய்தார் தெரியுமா?

கிளிநொச்சி பரந்தன் சந்தியில், பாடசாலைக்கு செல்லாமல் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்த 13 வயது மாணவன் ஒருன் , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர், யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிய வேளை, ஏ9 வீதி பரந்தன் சந்தியில், குறித்த சிறுவன் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சிறுவனை அருகில் அழைத்த கல்வி அமைச்சர் சிறுவன் பாடசாலை மாணவன் என்பதை உறுதி செய்து உடனடியாக கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டார்.

குறித்த மாணவன் பாடசாலை செல்லாமல் பாலைப்பழம் விற்பது தொடர்பில் விளங்கப்படுத்தியதோடு, 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் , வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனை அனுமதிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

மாணவன் இனிமேல் பாடசாலை நேரத்தில் இவ்வாறான வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் எனக்கூறிய அவர் , மாணவனின் பெற்றோரை சந்தித்து அறிவுரை வழங்குமாறும் பணித்துள்ளார்.

அத்துடன் குறித்த மாணவனை வீடு சென்று கல்வி கற்குமாறும் அறிவுரை கூறியுள்ளார்.

இதேவேளை கிழக்கு வாகரை பிரதேசத்திலும் பல வறுமைக்கோட்டில் வாழும் சிறுவர், சிறுமியர்களும் உள்ளதாகவும், இது சம்பந்தமாக கல்வி இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்துவார்களாயின், அது அவரது சிறந்த பணியாக வரலாற்றில் பதியப்படும் என, சமூக ஆர்வலர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்கள்.