சென்னை மாவட்டத்தில் தடையின்மை சான்று பெறாமலும், அங்கீகாரமின்றியும் செயல்படும் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாமலும், உரிய தடையின்மை சான்று பெறாமலும் இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி பல பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் அந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கூறினார்.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை பெற்றோர் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.






