வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடை விடுமுறை அதிகப்படியான வெப்பத்தினால் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிகப்படியான வெப்பத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதனால் கோடை விடுமுறை நீட்டித்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வந்ததால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை முடித்து ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு மேல் நீண்ட விடுமுறையை தமிழக அரசு அறிவித்து இருந்தது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல் நலத்தை பேணிகாப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும் ஜூன் 3 -ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடித்து வழங்கி, அரசு புதிய தேதியை முடிவு செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே, அறிவித்தபடி ஜூன் 3-ஆம் பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.