கடலுக்கு அடியில் சுற்றுலா செல்ல நீர்மூழ்கி வாகனம் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு போக்குவரத்து நிறுவனமான உபேர், வாடகைப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

கார், ஹெலிகாப்டர் போன்றவற்றை வாடகைக்கு அந் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், முதன் முறையாக கடலுக்கு அடியில் சுற்றுலா செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், உள்ள கிரேட் பேரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியை கடலுக்குள் சென்று காணும் வகையில் வாகனம் ஒன்றை உபேர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த நீர்மூழ்கி வாகனத்துக்கு ‘எஸ்.சி.உபேர்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 20 மீட்டர் ஆழம் வரை செல்லும் அந்த வாகனத்தில் 2 பேர் பயணிக்கலாம்.

இந்த நீர்மூழ்கி வாகனத்தில் பயணிக்க நபர் ஒன்றுக்கு 1,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரம்) வசூல் செய்ய உபேர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.