அழுகிய நிலையில் பெற்றோரின் சடலம்: உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை

உக்ரைன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழுகிய நிலையில் காணப்பட்ட சடலம் அருகே இருந்து குற்றுயிரான நிலையில் 2 வயது குழந்தை மீட்கபட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே குறித்த குழந்தை மற்றும் இரு சடலங்களை மீட்டுள்ளனர்.

கெட்ட வாசனை எழுவதாக எஞ்சிய குடியிருப்பாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார், அந்த குடியிருப்பில் நுழைந்துள்ளனர்.

மே 2 ஆம் திகதி இறுதியாக குழந்தையின் பெற்றோரான இருவரையும் அந்த குடியிருப்புவாசிகள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மரணமடைந்த தாயாரின் பெயர் Viktoriya Devyatkina(27) எனவும் தந்தையின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் சேகரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை அலெக்ஸாண்ட்ரா சுமார் 9 நாட்களாக உணவு ஏதும் அருந்தாமல் மெலிந்து பரிதாப நிலையில் இருந்துள்ளார்.

தொடர்ந்து அவரை பொலிசார், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

குழந்தையின் பெற்றோரின் மரண காரணம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. மட்டுமின்றி எப்போது அவர்கள் மரணமடைந்தார்கள் என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.