என் சினிமா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் தான் காரணமா? நடிகை விசித்ரா

1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கும் அவர் தனது புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு என்று கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்துள்ள நடிகை விசித்ரா, எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இயக்குநராக அவதாரமெடுத்த அவர் தனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். ஆனால் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.