விவாகரத்து செய்ய விரும்புவர்களின் கவனத்திற்கு

விவாகரத்து செய்யவிரும்புகிறவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
விவாகரத்து செய்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தாலும், சக மனிதர்களிடம் நடப்பதுபோல் உங்கள் துணை யிடமும் மதிப்பாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

கோபம், குரோதத்தால் கண்டபடி பேசிவிட வேண்டாம். அவதூறுகளையும் பரப்பவேண்டாம். உங்கள் கண்முன்னே துணை அழிந்துபோய்விட வேண்டும் என்று கருதாமல், பெருந்தன்மையையுடன் நடந்து கொள்வதற்கு முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.
துணையை பிடிக்காவிட்டால், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இகழ்ந்து பேசாதீர்கள். உங்களுக்கு பிடிக்காத இணையாக இருந்தாலும் அவரது குடும்பத்தோடு இருக்கும் தொடர்புகளை எல்லாம் அறுத்தெறிந்துவிட வேண்டாம்.
விவாகரத்து செய்வதற்கு முன்பு கோப தாபங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருசில முறை தனியாக அமர்ந்து இருவரும் மனம்விட்டு பேச முயற்சி செய்யுங்கள்.

அப்படி பேசினாலும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்று கருதினாலும், மென்மையாக உங்கள் தரப்பு கருத்துகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துவைக்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது நிச்சயம் என்றாவது ஒருநாள் பலன் தரும்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்ன

தவறு நடந்திருந்தாலும் ‘நடத்தை கெட்டவள்’ என்று பெண்ணையோ, ‘நம்பிக்கைத் துரோகி’ என்று ஆணையோ பேசவேண்டாம். திட்டமிட்டு கேவலமான தகவலை பரப்பிக்கொண்டிருக்கவும் வேண்டாம்.  மூன்றாம் நபர்களிடம் பேசும்போது,

‘ஏதோ எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் பிரிந்து வாழலாம் என்று நினைக்கிறோம்’ என்று மட்டும் சொல்லுங்கள். துணையை பற்றி குறை சொல்லி உங்களை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும், உடனே அதை நிறைவேற்றாமல் 6 மாதங்கள் தனித்தனியாக பிரிந்து வாழுங்கள். ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் தனியாக வாழ்ந்து பாருங்கள்.

அந்த தனிமை வாழ்க்கை கூட உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுத் தரலாம். மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

விவாகரத்து செய்த தம்பதிகள் ‘காலம் முழுக்க இனி நீதான் எனக்கு முதல் எதிரி’, என்பதுபோல் கங்கணம்கட்டிக்கொண்டு, விரோதத்தையும், வன்மத்தையும் வளர்க்காதீர்கள்.

‘பிரிந்துவிட்டோம். அதோடு நமக்குள் இருந்த பிரச்சினை முடிந்துவிட்டது’ என்று அமைதி காத்திடுங்கள். அவரவர் வேலையில் கவனத்தை செலுத்துங்கள்.

குழந்தைகள் இருந்தால், தந்தையை பற்றி தாயோ- தாயை பற்றி தந்தையோ குந்தைகளிடம் தரக்குறைவாக பேசவேண்டாம்.

நல்ல விஷயங்கள் இருந்தால் மட்டும் பேசுங்கள் அல்லது அமைதி காத்திடுங்கள். மன அமைதிக்கு தியானம், மியூசிக் தெரபி போன்றவைகளில் ஈடுபடுங்கள்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படலாம்.

மீண்டும் கணவன்-மனைவி என்ற உறவை புதுப்பிக்கும் கட்டாயத்தை காலம் உருவாக்கும் என்பதை உணர்ந்து,

மிக மோசமான தருணங்களில்கூட நிதானமாக நடந்துகொள்ளுங்கள். அவரவர் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.