உங்கள் மெஹந்தி செக்கச் சிவக்க வேண்டுமா..?

மெஹந்தி மகிழ்ச்சியின் அடையாளம். திருவிழா, திருமணம், பண்டிகை என எதுவானாலும் முதல் நாளுக்கு முன்னரே மகிழ்ச்சியை  வெளிப்படுத்துவது இந்த மெஹந்தி கைகள்தான்.

அதிலும் யாருடைய கைகள் சிவந்திருக்கின்றன என்னும் போட்டியே பெண்கள் கூட்டத்தில் கலகலப்பு நிறைந்தது. அப்படி உங்கள் கைகள் சிவந்து அந்தப் போட்டியில் ஜெயிக்க இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்

மெஹந்தியை கைகளில் வைத்ததும் அவை நன்கு வறண்டு உதிர வேண்டும். அதுவரைக் காத்திருந்து அதன் பின்னரே கைகளைக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் மெஹந்தி கைகளில் நன்குப் பற்றிக் கொள்ளும். சிவக்கவும் செய்யும்.

மெஹந்தி கொஞ்சம் காய்ந்த நிலைக்கு வரும்போது சர்க்கரைத் தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு தெளித்தால் நன்கு சிவக்கும்.

மெஹந்தி வைத்துக் கழுவிய பின் 3 மணி நேரத்திற்கு தண்ணீரில் வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மெஹந்தியின் சாயம் மங்கிவிடும்.

மெஹந்தி வைத்தபின், தைலம், தேங்காய் எண்ணெய் தடவினால் நன்கு சிவக்கும்.

கைப்பிடியளவு கிராம்பை கடாயில் சூடாக்கி அதன் ஆவி வரும்போது அதன் மேல் கைகளை வைத்தால் மெஹந்தி சிவக்கும்.