பணம் வாங்கி ஏமாற்றி விட்டார்- நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

விமல், ஓவியா நடித்துள்ள களவாணி-2 படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். இப்படம் மே முதல் வாரம் வெளியாக இருந்தது. இந்நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய சற்குணம், களவாணி-2 படத்திற்கும் விமலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

இந்நிலையில், விமல் ஏமாற்றி விட்டார் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் விமல் நடித்து தயாரித்த மன்னர் வகையறா படத்திற்காக என்னிடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றார். களவாணி-2 படத்தின் முதல் பிரதியை என்னிடம் ஒப்படைப்பதாக கூறியதை ஏற்று ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன். இதற்கான ஒப்பந்தம் 2018 அக்டோபர் 17ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மன்னர் வகையறா படம் வெளியாகி மற்ற கடன்களை தீர்த்த விமல் என் பணத்தை தரவில்லை. இன்று வரை விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் பணம் தர வேண்டும். ஆறு மாதத்திற்குள் பணம் தருவதாக கூறிய விமல் இதுவரை தரவில்லை.

இந்நிலையில் களவாணி-2 படம் வர்மன்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் வெளியாவதாக அறிவிப்பு வந்தது. என்னிடம் போட்ட ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிடுகின்றனர். இதுகுறித்து விமல், சற்குணம் ஆகியோருக்கு புகார் தெரிவித்தேன். எந்த பதிலும் வரவில்லை. எனவே நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுத்தேன். களவாணி-2 படத்தை சற்குணம் தயாரித்ததாக கூறுவது பொய். அவர் விமலுடன் சேர்ந்து நாடகமாடுகிறார் என்றார்.