வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டம்..

வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் ஒரு வீடு நிர்மாணிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய முதற்கட்டமாக நிறைவுசெய்யப்படவுள்ள 4,750 வீடுகளில், யாழ்ப்பாணத்தில் 1500 வீடுகளும் கிளிநொச்சியில் 670 வீடுகளும் முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும் மட்டக்களப்பில் 625 வீடுகளும் திருகோணமவையில் 400 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படுகின்றன.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக எஞ்சிய 5,250 வீடுகளுக்கான 10 பில்லியன் ரூபாய் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.