நடிகை சங்கீதா, தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்!

நடிகை சங்கீதா தன்னுடைய தாய்க்கு பதில் கொடுக்கும் விதமாக உருக்கமான கடிதம் ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை சங்கீதா தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதாக அவருடைய தாய் பானுமதி, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக சங்கீதா மற்றும் அவருடைய கணவர் க்ரிஷ் மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர்.

இந்த நிலையில் நடிகை சங்கீதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அன்புள்ள அம்மா.. என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்ததற்காக நன்றி. எனது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு 13 வயதிலேயே வேலையில் சேர்த்ததற்கும் நன்றி. வெற்றுக் காசோலைகளில் என்னை கையெழுத்து போட வைத்ததற்கு நன்றி.

வாழ்க்கையில் வேலைக்கே செல்லாமல் மது, போதைக்கு அடிமையாகியிருந்த உன்னுடைய மகன்களின் சுகத்திற்காக என்னை தவறாகப் பயன்படுத்தியதற்கு ஒரு நன்றி. உனது முடிவுகளை நான் புறக்கணித்தபோது என்னை சொந்த வீட்டிக்குள்ளேயே நெருக்கடிக்கு ஆளாக்கிய உனக்கு நன்றி.

நான் என் வழிக்காக எதிர்த்து சண்டை போடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்த உனக்கு நன்றி . எனது கணவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து எனது குடும்ப அமைதிக்குப் பாதகம் செய்ததற்காக நன்றி. ஒரு தாய் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு எனக்கு உதாரணமாக இருந்தாய்.. அதற்கு ஒரு நன்றி.

இறுதியாக என் மீது சுமத்திய அணைத்து குற்றசாட்டுக்களுக்கும், சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கும் நன்றி. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ நீ என்னை ஒரு மவுனக் குழந்தையில் இருந்து போராளியாக, முதிர்ச்சியான, வலுவான & ஒரு தைரியமான பெண்ணாக உருவாக்கம் செய்துவிட்டாய். இந்த ஒரு காரணத்திற்காக நான் எப்போதுமே உன்னை நேசிப்பேன்.

ஒரு நாள் உங்கள் மமதையிலிருந்து விடுபட்டு, என்னை நினைத்துப் பெருமை கொள்வாய் என பதிவிட்டுள்ளார்.