சர்வதேசத்திடம் நீதி கோரி தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக நாளை கிழக்கில் கண்டன போரணி, கதவடைப்பு நடத்தப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த போராட்டம் குறித்த குழப்பமான பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. வடக்கு கிழக்கு தழுவிய போராட்டமா, கிழக்கில் மட்டும் போராட்டமா, வடக்கில் கதவடைப்பில்லையா என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும், சில அமைப்புக்களாலும், நபர்களாலும் மாறிமாறி கூறப்பட்டு வரும் கருத்துக்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உண்மையில், நாளை வடக்கில் கதவடைப்பு எதுவும் இல்லை. அப்படியொரு போராட்டம் திட்டமிடப்படவில்லை.
சர்வதேசத்திடம் நீதி கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் நடத்துவதென திட்டமிடப்பட்டபோது, முதலில் கடந்த மாதம் 25ம் திகதி வடக்கில் கதவடைப்பு மற்றும் கிளிநொச்சியில் கண்டன பேரணியென திட்டமிடப்பட்டது. அப்போதே கிழக்கிலும் கதவடைப்பு என ஒரு தகவல் பரப்பப்பட்டது. ஆனால், அது தவறானது.
அடுத்தது, நேற்று முன்தினம் யாழ் பல்லைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம்.
இறுதியாக கிழக்கில் கதவடைப்பும், மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும். இதுதான் திட்டமிடப்பட்ட போராட்டம்.
வடக்கில் கதவடைப்பு நடத்தியபோது, கிழக்கில் வர்த்க நிலையங்களில் கறுப்புக்கொடி பறக்கவிட கோரப்பட்டிருந்தது. அதேபோல, கிழக்கில் நாளை நடத்தும் போராட்டத்தின்போது, வடக்கு வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் கறுப்புக் கொடி பறக்கவிட கோரப்பட்டுள்ளது.
இப்படித்தான் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போராட்டங்கள் இன்னும் இடம்பெறாததால், பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்படியொரு குழப்பமே, நாளை வடக்கில் கதவடைப்பு என்ற தகவல்.
போராட்ட ஏற்பாட்டாளர்களிற்கு உள்ள முக்கிய பொறுப்பு- போராட்டங்கள் பற்றிய சரியான தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. குழப்பங்கள் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வது. முறையான அமைப்பு சார்ந்து போராட்டங்களை ஏற்பாடு செய்வது. எதிர்காலத்தில் போராட்டங்கள் வெற்றியடைய, தவறான தகவல்களால் மக்கள் சலிப்படையாமல் இருக்க, போராட்டங்கள் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு, தகவல் மக்களை சரியாக சென்றடைவது முக்கியமானது.