28 ஆண்டுகள் அநீதி போதாதா? 7 தமிழர்களுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலை கோரி இன்று மாலை 4 முதல் 6 மணி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, புதுவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய ஏழு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் அறிவித்திருந்தார்.

இரண்டாம் இணைப்பு

சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு தரப்பினருக்கு அற்புதம்மாள் அழைப்பு விடுத்தார்.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.வி.க, பா.ம.க, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் அமமுகவின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரி,சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துள்ளது.

28 ஆண்டுகள் அநீதி போதாதா? 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாம் இணைப்பு

பேரறிவாளனனின் தந்தை உருக்கமான கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதுமையில் நோயுடன் போராடுவதைவிட, எனது மகனின் பிரிவால் அதிகம் ஏங்கி தவிக்கிறேன். மனதளவிலும், உடலளவிலும் அதிக வேதனையில் இருக்கும் என்னால் இரண்டு நிமிடங்கள் கூட ஒரு இடத்தில் நிற்க முடியாது.

இருப்பினும் எனது மகன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறேன், மக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.