உலகமே வியக்கும் வகையில் நடந்து முடிந்தது அம்பானி மகன் திருமணம்!

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அம்பானி மகனின் வெகு விமரிசையான திருமணம், மும்பையில் ஜியோ உலக மையத்தில் பிரமாண்டமான முறையில் நேற்று நடந்து முடிந்தது.

திருமணத்தை முன்னிட்டு மலர்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம் போல் ஜியோ உலக மையம் காட்சியளித்தது.

மயில், குதிரை என மலர் அலங்காரங்கள் பிருந்தாவனத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை விருந்தினர்களுக்கு ஏற்படுத்தின.

150-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு இசைக்குழுவினர் வேணுகானத்தையும், கிருஷ்ண லீலா இசையையும் பரவவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பராத் எனும் திருமணத்துக்கு முந்தைய ஊர்வலம் மேளதாள இசையுடன் களை கட்டியது. அதில் மணமகன் மட்டுமின்றி அவருடன் தந்தை முகேஷ் அம்பானியும் உற்சாகம் பொங்க ஆடினார்.

ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் தம்பதியர், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தம்பதியர், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவரது மனைவி அஞ்சலி வரை பல சர்வதேச பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.