சென்னை புரசைவாக்கம், போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் இளங்கோவன் என்பவர் சென்னை காவல் கட்டுப்பட்டு அறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை பெருங்களத்தூரில் உள்ள கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலுக்கு அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது அங்கு சாலையோரம் ஒரு ஆட்டோவில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள கோவில் அருகே இவ்வாறு நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஏட்டு இளங்கோவன்.
அவர்களை நோக்கிச்சென்ற ஏட்டு இளங்கோவன், கோவில் அருகே பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் இப்படி மது அருந்துகிறீர்களே? என தட்டிக்கேட்டுள்ளார். போதையில் இருந்த மர்மநபர்கள், அதை கேட்பதற்கு நீ யார் என தரக்குறைவாக பேசி, அங்கிருந்த கல்லை எடுத்து ஏட்டு இளங்கோவின் தலையில் சரமாரியாக தாக்கினர்.
அவர்கள் தாக்கியதில் போலீஸ் இளங்கோவன் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதைபார்த்து ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், இளங்கோவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்த போலீசார் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பாஷா, கார்த்திகேயன், சாந்தகுமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.