பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னணி தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் எவ்வளவு பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் ஏற்படுகிறது என சில அரசியல்வாதிகள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அவற்றைப் போலவே பா ஜனதா கட்சியும் தங்களது வெற்றிக்கு காரணம் மரத்தாலான ஒரு அதிர்ஷ்ட நாற்காலியே என நம்பி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட நாற்காலியில் மோடி அமர்ந்தால் வெற்றி பெற்று பிரதமராகி விடுவார் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த நாற்காலியை உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து கான்பூர் பாஜக தலைவர் கூறுகையில், இது மிகவும் அதிர்ஷ்டமான நாற்காலி.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு முன் கோயலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது மோடி இந்த நாற்காலியில் அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
அதைப்போலவே 2017 ஆம் ஆண்டும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பு நிராலா நகர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் அந்த நாற்காலியில் அமர்ந்தார்.அதனைத் தொடர்ந்து பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் பிடித்தது என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், மோடி இந்த அதிர்ஷ்ட நாற்காலியில் அமர்ந்து வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார் என எண்ணபடுகிறது.
மேலும் பிரதமர் மோடி வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க இன்று கான்பூர் வருகிறார். இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் அவர் அதிர்ஷ்ட நாற்காலியில் அமர வேண்டும் என கட்சியினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.