மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ???

உடல்ரீதியான பாதிப்புகளை விட மனம் பாதிக்கும் போது தான் நாம் நிலைகுலைந்து விடுகிறோம். மருத்துவர்கள் கூறும் அறிவுரை கூட மன அழுத்தம் இல்லாத வாழ்வியல் முறைகளை நோக்கி பயணப்படுங்கள் என்பது தான். தினசரி வாழ்க்கையில் எப்படி எல்லாம் மன அழுத்தத்தை குறைக்க இயலும் என்று பார்ப்போம்.

கடைசி நேர பரப்பரப்பு தரும் மன அழுத்தம்

காலையில் நேரமே எழுந்துவிடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் தினசரி செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம், அதற்கான deadline யும்  குறித்து வையுங்கள். சரியான திட்டமிடல் என்பது ஒரு வேலையை பாதி முடித்ததற்க்கு சமம். ஆகவே எந்தவொரு முக்கியமான வேலையையும் திட்டமிட்டு செயல்படுத்தும் போது மன அழுத்தம் வெகுவாக குறையும்.

காத்திருப்பு என்பது பெரும்பாலோனரின் பொறுமையை சோதிக்கும் விஷயம், சில நேரங்களில் அது தரும் பதட்டமும் எரிச்சலும் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை இனிதாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

காலத்தே பயிர் செய்

வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். படிப்பு, திருமணம், வேலைவாய்ப்பு என வாழ்வின் பெரும் கடமைகள் மட்டும் அல்லாமல் வீட்டுப்பாடம் போன்ற படிப்பு சார்ந்த பணிகள், தினசரி வாழ்வியல் நடவடிக்கைகள் என அனைத்தையும் சோம்பலுடன் தள்ளிப் போடாமல் இருப்பது சாலச்சிறந்தது. எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

நேரமேலாண்மை

ஆகச்சிறந்த பாக்கியசாலிகள் நேரத்தை முறையாக பயன்படுத்த தெரிந்தவர்கள் தான். தாமதிக்கும் அதிலும் வீணாக்கும் நேரங்கள் நமது முன்னேற்றத்தில் நாமே ஏற்படுத்தும் முட்டுக்கட்டை தான். எந்த இடத்திற்கும் சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

எலக்ட்ரானிக் சாதனங்களை விலக்குங்கள்

கைபேசிகளையும், தொலைபேசிகளையும், சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருங்கள். தேவையான அளவு ஓய்வு எடுங்கள் .  செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளாக இருந்தால், ‘மன்னிக்கவும், என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள். உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் கட்டாயம் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம். நன்றாகத் தூங்குங்கள். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள்.  மன அழுத்தத்தைத்தரும் போது ஆழமாக, நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். நிறைய வாசியுங்கள், எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள். இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்

தினமும் உங்கள் மனதிற்கு பிடித்த  செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட. பிறருக்காக எதேனும் உதவி செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.  மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.