நானும் என் தந்தையை தீவிரவாதத்தால் இழந்தேன் என்பதால், உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி நகரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், பொதுச் செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் சிஆர்பிஎப் குடும்பத்தாரிடம் தாங்களும் தீவிரவாதத்தால்தான் சிறுவயதிலேயே தந்தையை இழந்தோம் என்று தெரிவித்தனர்.
உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி அளிக்கும் என்று இருவரும் உறுதியளித்தனர்.
வீர மரணம் அடைந்த வீரரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்த பிரியங்கா காந்தி பேசுகையில், உங்கள் சோகம், உணர்ச்சிகளை நாங்கள் புரிந்துகொண்டோம்.
நாங்கள் மட்டுமல்ல இந்த தேசமே உங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டோம் என்று உணர வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களை கவனமாகப் பார்த்துக்கொள்வோம் எனத் தெரிவித்தார்.