பயங்கரவாதிகள் வெறிச்செயல்… பரிதாபமாக பலியான தமிழக வீரர்!

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 44 என உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வீரரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ரிசர்வ் பொலிசார் சென்ற கான்வாய் பேருந்து மீது மோதச் செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான்.

இதில், ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பேருந்து, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

ரிசர்வ் பொலிஸ் படையின், மொத்தம் 70 பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

பேருந்து மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தமும், கிரானைட் வெடிக்கும் சத்தமும் கேட்டதாக அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே, தீவிரவாத தாக்குதலுக்கு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பள்ளத்தாக்கில் இருந்து மோசமான செய்தி வந்து சேர்ந்துள்ளது.

ஐஇடி குண்டு வெடிப்பில், பல சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை மிக கடுமையான வழியில் கண்டிக்கிறேன். காயமடைந்தோருக்கும், பலியானோர் குடும்பத்தினருக்கும், நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.