பெண் அமைச்சர் இடுப்பில் கை வைத்த விவகாரத்தில் திருப்பம்..!

பிரதமர் நரேந்திர மோடி திரிபுரா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த போது, கர்ஜி-பிலோனியா இடையேயான ரெயில் தடத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்.

பிரதமருக்கு எதிர்வரிசையில் திரிபுரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ், சமூகநலத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் பெண் அமைச்சரும், பழங்குடியின இளம் தலைவருமான சாந்தனா சக்மா உள்ளிட்டோர் நின்றிருந்தனர்.

அப்போது சமூக நலத்துறை அமைச்சர் சந்தனா சக்மாவின் இடுப்பில் சக அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் கை வைத்து தள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரதமர் இருந்த மேடையில் ஒழுக்கமற்ற செயலை செய்ததால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர் கட்சிகள் கூறி வரும் நிலையில், அமைச்சர்கள் மனோஜ் காந்தி தேப் மற்றும் சந்தனா சக்மா கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் பாஜக பெண் அமைச்சர் சந்தனா சக்மா இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், எங்கள் அமைச்சரவையில் நான் மட்டும் தான் பெண். மற்ற அமைச்சர்களுடன் சகோதர உணர்வுடனே பழகி வருகிறேன். அப்படி இருக்கும் நிலையில் எதிர்கட்சிகள் மேடையில் தற்செயலாக நடந்த ஒன்றை, இப்படி இழிவாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கில்லை.

இது அவர்களின் இழிவான மனநிலையையே காட்டுகிறது’ என்று கூறியுள்ளார். பாஜக அமைச்சர் மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், பெண் அமைச்சரின் பேட்டி மூலமாக அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.