நிலத்தின் கீழ் இருந்து தென்படும் இந்து – இஸ்லாமிய மத ஸ்தலங்கள்!

மலையக பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மலையக பகுதியிலுள்ள சகல சிற்றாறுகளும் நீர் அற்ற நிலையில் வற்றிபோயுள்ளன.

மவுசாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 31 அடியால் குறைந்துள்ளதுடன் காசல்றி நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 22.5 அடியால் குறைந்துள்ளது என லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இவ்விரண்டு நீர் தேக்கங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்ற பின்னர் அதனை களனி ஆற்றுக்கும், மகாவலி ஆற்றுக்கும் செல்லவிடுவதால்.

மகாவலி நீரைச் சுத்தப்படுத்தி கினிக்கத்தேன, நாவலபிட்டிய கம்பளை, பேராதெனிய, கண்டி போன்ற மேலும் பல நகரங்களுக்கு இதனை குடிநீராக பெற்றுக்கொள்கின்றனர்.

அதே போல் மவுசாகளை நீரைத் திறப்பதால் களனி கங்கை மூலம் கரவனல்ல முதல் கொழும்பு வரையிலான மக்கள் நீரைச் சுத்திகரிப்பு செய்து குடி நீராகப் பாவிக்கின்றனர்.

மேலும் வறட்சி நீடித்ததால் இன்றும் நீர் மட்டம் குறையும் எனவும் சில நேரங்களில் நீர் மின் இல்லாது எரிபொருள் மூலம் மின்சாரம் வழங்க நேரிடும்.

தற்போது நாட்டில் இடம் பெற்றுள்ள நீரேந்து பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுவதே இதற்குக் காரணமாகும்

வறட்சியின் காரணமாக 1917ம் ஆண்டு கட்டப்பட்ட மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானம் மற்றும் கங்கேவத்த பிள்ளையார் கோவில் இஸ்லாமிய பள்ளிவாசல் தூபி உட்படப் புத்தர் சிலை என அனைத்தும் தற்போது வெளித் தெரிகிறது. அதனை வணங்க மக்கள் அப்பகுதிக்குச் செல்வது அதிகளவாகவுள்ளது.