டோனியை அவுட்டாக்காமல் வெற்றி உறுதியில்லை – நியூசிலாந்து பந்துவீச்சாளர்

டோனியின் விக்கெட்டை எடுக்காதவரை எதிரணியினர் வெற்றிபெற்று விட்டோம் என்பதை உறுதியாக கூற முடியாது என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் தெரிவித்துள்ளார்.

இந்த அணியானது தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி, 4-வது ஒருநாள் போட்டியில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

காயம் காரணமாக கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காத டோனி, நாளை நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், டோனி ஒரு சிறந்த வீரர். அவருடைய சாதனைகள் அவரை பற்றி பேசும்.

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் அவர் அணியில் இடம்பெறுவது குறித்து பல்வேறு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

மிடில் ஆர்டரில் அமைதியாக அவர் தன்னுடைய பணியை செய்து வருகிறார். அவருக்கு பந்துவீசும் போது, அவரை அவுட்டாக்காமல் நீங்கள் வெற்றியை தீர்மானிக்க முடியாது என புகழாரம் சூட்டியுள்ளார்.