யாழ் மேல் நீதிமன்ற அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகத்தர்கள் மூவரை காலையில் இருந்து அலுவலக நேரம் முடியும் வரை எழுத்து நிற்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிறேம்சங்கர்
தண்டனை வழங்கியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியரசருக்கு முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்-
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் 3 பெண் உத்தியோகத்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விடயம் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 உத்தியோகத்தர்களையும் மேல் நீதிமன்ற நிர்வாக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் அலுவலக நேரமான காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை எழுந்து நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணிவரை குறித்த உத்தியோகத்தர்கள் தண்டனை அனுபவித்துள்ளனர். அதேபோன்று நேற்று திங்கட்கிழமையும், இன்று செவ்வாய்கிழமையும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை எழுத்து நின்று தண்டனை அனுபவித்துள்ளனர்.
இதுவரை நீதிபதியிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வராத நிலையில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் பிரதம நீதியரசருக்கு இது குறித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவர் ஆறு மாத குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.






