வெளுத்து வாங்கிய ரஹானே! இந்தியா அபார வெற்றி!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் இடம் பெறாத அஜிங்கிய ரஹானே இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஏ அணியின் கேப்டனாக அஜிங்கிய ரஹானே களமிறங்கினார்.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக ரஹானேவை தயார்படுத்தும் விதமாக கிரிக்கெட் வாரியம் இந்த தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 303 ரன்கள் குவித்து இங்கிலாந்து ஏ அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விஹாரி 92 ரன்களும், கேப்டன் ரகானே 91 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களும் குவித்தனர். ரஹானே 4 சிக்சர்களை விளாசினார்.

இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஏ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், தீபக் சாகர், சித்தார்த் கவுல், ஹனுமா விஹாரி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினார்கள். இங்கிலாந்து லயன்ஸ் அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய ஏ அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பெற்றது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கான மாற்று தொடக்க வீரராக தயாராக இருக்க வேண்டும் என்பதால் ரஹானேவை தயார்படுத்துகிறது. மேலும் இதே தொடரில் விளையாடுவதற்கு தடையிலிருந்து நீங்கிய லோகேஷ் ராகுல் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இரண்டாவது போட்டியில் இருந்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான இறுதி இரண்டு போட்டிகளில் ரிஷப் பாண்ட் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் உலகக்கோப்பை போட்டிக்கான திட்டம் இதுவரையிலும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.