2 பேர் மர்ம மரணம் – மூடி மறைக்கப்படும் இரகசியம்.!

திண்டுக்கல் பஞ்சாலைகளில் 2 பேர் மர்மமான முறையில் மரணம்அடைந்ததால் மில் நிர்வாகங்கள் அவசர அவசரமாக இறந்துபோனவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் உள்ள பிணக்கிடங்கில் சேர்த்த கொடுமை நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தனியார் நூற்பாலையில் நாகம்பட்டியைச் சேர்ந்த சின்னக்கவுண்டர் மகன் காளியப்பன் (63) என்பவரை அதிகாலை 5 மணிஅளவில் தலையில் பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

ஆனால் வரும் வழியில் உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காளியப்பனின் மகன் முருகபாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது தந்தை மில்லுக்கு வேலைக்கு செல்லும்போது நன்றாக தான் இருந்தார்.

ஆனால்காலை 5 மணிக்கு மில்லில் இருந்துபோன் செய்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றனர். பின்னர் நாங்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைத்துள் ளோம். நீங்கள் உடனே வந்து பாருங்கள் என்றனர். நாங்களும் தனியார் மருத்துவமனைக்கு சென்றோம்.

அதன் பிறகு அங்கிருந்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நாங்கள் அங்கும் சென்று பார்க்கச் சென்றோம். இங்கு வந்து அவரை பார்த்த போது அவரது தலையில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து மில் நிர்வாகத்திடம் கேட்ட போது, நடந்து போகும் போது தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தவறி கீழே விழுந்தால் எப்படி இவ்வளவு பெரிய காயம் ஏற்படும். அவருக்கு பிரஸ்ஸர் இருப்பதாக கூறினர்.

எங்க அப்பாவுக்கு பிரஸ்ஸர் இல்லை. இவருக்கு மில் மீது ஏறி மோட்டர் ஓட்டிவிட வேண்டும் என்றும், பிளாண்ட்துடைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு வேலை கொடுத்திருக்க வேண்டும்.அங்கு என்ன நடந்தது என்று சொல்லாமல் மில் நிர்வாகம் மறைக்கிறார்கள்.

எனது தந்தையின் மரணம் மர்மமான ஒன்று. ஊடகங்கள் தான் எனது தந்தையின் மரணத்திற்கு நியாயம் பெற்றுத் தரவேண்டும் என்று முருகபாண்டி தெரிவித்தார்.

இதே போல் திண்டுக்கல் சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் இருதயராஜ் என்பவர் திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள தனியார் மில்லலி 10 ஆண்டுக்கள் பணியாற்றி வந்தார். செவ்வாயன்று இரவு மில் வேலைக்கு சென்றார். மில்லில் காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசுமருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஜஸ்டின் இருதயராஜ் மருத்துவமனையில் உள்ள சவக் கிடங்கில் அனுமதிக்கப்பட்டார். ஜஸ்டின் இருதயராஜின் உறவினர்களுக்கு அவர் இறந்தது குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. இதனை அறிந்த சிறுநாயக்கன்பட்டி கிராம மக்கள் மருத்துவமனை முன் பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.