வளர்பிறை பார்த்து நல்ல காரியம் செய்வது ஏன்?..

பண்டைய காலத்தில் மக்கள் திருமணம் திருவிழா போன்ற பல விழாக்களை கொண்டாடினார்கள். அவ்விழாக்களை கொண்டாடுவதற்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை. மக்கள் ஒன்று கூடி தொலை தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது. வாகன வசதிகள் பெருமளவு இல்லை மாட்டு வண்டிகள் தான் இருந்திருக்கிறது.

அதில் எப்படி தொலை தூரம் பயணம் செய்ய முடியும்? ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகிவிடும். அப்படி ஒரு சமயத்தில் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதல்லவா? ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து மின்சாரம் வந்தது? ஒளிபரப்பி எல்லாம் எங்கிருந்து வந்தது எல்லாம் தீப்பந்தம் தான்.

தீப்பந்தம் மூலம் எப்படி பெரிய விழாக்களை கொண்டாடமுடியும்? அதன் ஒளி போதுமானதாக இருக்குமா ? இரவு பகலாக அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தீப்பந்தம் எப்படி பயன்படும்? காற்றில் அணையாமல் எப்படி பெரிய விழாக்களை கொண்டாடினார்கள்?

அதனால் தான் நிலாவின் தேய்பிறை முடிந்து வளர்பிறை ஆரம்பிக்கும்போது ஒளியின் பிரகாசம் அதிகமாக இருக்கும் அல்லவா ? அந்த நாட்களில் விழாக்களை வைக்கும் போது ஒளி தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. அதனால் பண்டைய மக்கள் வளர்பிறை நாட்களுக்காக காத்திருந்து விழாக்களை கொண்டாடினார்கள். அதை இன்றைய காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையாக நினைத்து ஒரு பொருளை எடுத்து வேறு இடத்தில் வைக்கவும் வளர்பிறை நாட்களில் தேடுகின்றனர். சகுனம் சரியில்லை என்று ஒரு மூல காரணத்தை முன் வைக்கின்றார்கள்.

இதேபோன்று பவுர்ணமி நாளில் கோவில்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பண்டைய மக்கள் பவுர்ணமி நாளில் ஒளியின் அளவு அதிகமாக இருப்பதால் தான் கோவில் விழாக்களை கொண்டாடி உள்ளனர்.