இந்தியாவில் தற்கொலை என முடிவு செய்யப்பட்ட வழக்கில், 4 வயது பெண் குழந்தையின் தகவலால் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் ராகவ். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவருக்கு மம்தா என்ற மனைவி, 4 வயது மகள் மற்றும் 2 வயது மகன் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மம்தா, தனது கணவர் சந்தோஷ் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர். சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் உட்பட அனைவரும் நம்பினர்.
இந்நிலையில் சந்தோஷின் 4 வயது மகள் தனது தாயிடம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தனது தந்தையை வீட்டிற்கு வந்த இருவர் தாக்கியதாகவும், பின் மதுவை ஊற்றிக் கொடுத்து துப்பட்டாவால் கட்டி தூக்கில் மாட்டியதாகவும் குழந்தை கூறியுள்ளது.
மேலும் அவர்களில் ஒருவர் குண்டாகவும், இன்னொருவர் ஒல்லியாகவும் இருந்ததாகவும் குழந்தை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அத்துடன் சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், ‘குழந்தையின் தகவலை பதிவு செய்துள்ளோம். அக்கம் பக்கத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு பேர் சனிக்கிழமை மாலை சந்தோஷின் வீட்டுக்கு வந்ததை உறுதி செய்துள்ளனர்.
சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு வந்த பிறகு விசாரணை மேலும் தீவிரமடையும்’ என தெரிவித்துள்ளார்.