இந்திய அணியை போல் எங்களாலும் செய்ய முடியும்…. – இலங்கை அணி

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி செய்ததை போல எங்களாலும் செய்ய முடியும் என இலங்கை அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை அணியானது தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இதில் முதல் போட்டி பிரிஸ்பனில் பகலிரவு ஆட்டமாகவும், இரண்டாவது போட்டி கான்பெராவிலும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ருமேஷ் ரத்னாயகே கூறுகையில், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணியின் பந்து வீச்சை ஆய்வு செய்து வருகிறோம்.

எந்தெந்த இடங்களில் பந்து வீசினார்கள் என்பதை கவனித்து வருகிறோம். அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி மற்றும் மற்ற அணி வீரர்கள் என்ன செய்தார்களோ அதனை இலங்கை அணி பந்து வீச்சாளர்களும் செய்ய முடியும். அந்த நம்பிக்கையைத்தான் இப்போதைக்கு நாங்கள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.

இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு ஏன் பீல்டிங்கிலும் கூட நிரூபித்துள்ளனர். உலகில் எந்த மைதானத்திற்கு சென்றாலும் இந்திய அணி நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் இந்திய அணியிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.