சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப். காலனி பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்புக்கான கட்டுமானபணி நடைபெற்று வருகிறது.
இதில் மேற்குவங்காளத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மேற்குவங்காளத்தில் உள்ள நிலையில், அவருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு சமைக்கும் ஒடிசாவை சேர்ந்த ஜோஸ்னா என்ற பெண்ணிற்கும் தகாத உறவு இருந்துள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐ.சி.எப். காலனிக்கு வருகை தரும் அபிஜித் தாஸ் அன்று இரவு ஜோஸ்னா வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் .
இதேபோன்று கடந்த சனிக்கிழமையும் மேஸ்திரி , ஜோஸ்னாவுடன் தங்கியுள்ளார்உல்லாசமாக இருந்துள்ளார். அப்பொழுது மறுநாள் அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
அப்பொழுது கதவை திறந்து பார்த்தபோது, அவர்கள் அபிஜித் தாஸை அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் போலீசார் ஜோஸ்னாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஜோஸ்னாதான் பணம் பறிப்பதற்காக தனது மற்றொரு கள்ளக்காதலனான ஒடிசாவை சேர்ந்த திருலோச்சம் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மேஸ்திரியை கடத்தியது தெரியவந்தது.
மேலும், அவர்கள் மேஸ்திரியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் எடுத்ததும், அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்ததும் தெரியவந்தது.
பின்னர், போலீசார் விருகம்பாக்கம் பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட அபிஜித் தாஸை மீட்டனர்.
இதனையடுத்து ஜோஸ்னா, அவரது மற்றொரு கள்ளக்காதலன் திருலோச்சம்,அவர்களது நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






